சென்னை, செப். 27-
அரசு பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்களாக பணியாற்றுபவர்கள், பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னையில் கவன ஈர்ப்பு கூட்டம் நடத்தினார்கள்.
முதல்-அமைச்சருக்கு நன்றி
கடந்த 2012-ம் ஆண்டு அரசு பள்ளிகளில் ஓவிய ஆசிரியர், தையல் ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் உள்ளிட்ட சிறப்பு பாடங்களுக்கு பகுதி நேர ஆசிரியர்களாக 16 ஆயிரத்து 549 பேர் நியமிக்கப்பட்டனர். அவர்கள், தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ெசன்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே திரண்டு, முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவி்க்கும் கவன ஈர்ப்பு கூட்டம் நடத்தினர்.
கூட்டத்துக்கு, கூட்டமைப்பின் மாநில நிர்வாகக்குழு தலைவர் முருகதாஸ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க துணை தலைவர் சோலை எம்.ராஜா, பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சேசுராஜா, பூபதி, ஜெகதீசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தின்போது, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
கவன ஈர்ப்பு கூட்டத்துக்குப் பின்னர் மாநில நிர்வாகக்குழு தலைவர் முருகதாஸ் கூறியதாவது:-
தொகுப்பூதிய பணி
கடந்த 2012-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்களை முதல்-அமைச்சர் நியமித்தார். ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் அனைவரும் பணியில் அமர்த்தப்பட்டோம். கடந்த 2014-ம் ஆண்டு ரூ.2 ஆயிரம் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. தற்போது, மாதம் ரூ.7 ஆயிரம் என்ற தொகுப்பூதியம் பெற்று வருகிறோம். இதற்காக, முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
தற்போது விலைவாசி உயர்ந்துவிட்டதால், ரூ. 7 ஆயிரம் என்ற தொகுப்பூதியத்தில் குடும்பம் நடத்த முடியாமல் நாங்கள் சிரமப்படுகிறோம். எங்களுக்கு பகுதி நேர ஆசிரியர் பணி வழங்கிய முதல்-அமைச்சர், பணிநிரந்தரம் செய்து எங்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்றுகோரி, கவன ஈர்ப்பு கூட்டத்தை நடத்தி உள்ளோம்.
இவ்வாறு முருகதாஸ் கூறினார்.
கவன ஈர்ப்பு கூட்டத்தில் பங்கேற்க, மாநிலம் முழுவதும் இருந்து பகுதி நேர ஆசிரியர்கள் 5000-க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். குறிப்பாக, பெண் ஆசிரியர்கள் அதிக எண்ணிக்கையில் வந்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக