Erode News : பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2012-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழகம் முழுவதும் ஓவியம், உடற்கல்வி, கணினி, வாழ்க்கைக் கல்வி என 16,500 சிறப்பாசிரியர்களை, பகுதி நேர ஆசிரியர்களாக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்த நியமனத்தில், அந்தந்த மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க கட்டுப்பாட்டில் வட்டார வள மையங்களின் மேற்பார்வையில் அரசுப் பள்ளிகளில் சிறப்பாசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
வாரம் மூன்று அரை நாள்கள் வீதம் மாதம் 12 வேலை நாள்கள் பணியாற்ற மாதம் ரூ.5,000 வீதம் வழங்கப்படுகிறது. இந்த ஊதியத் தொகையை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலமாக சம்பந்தப்பட்ட பள்ளிகளில் உள்ள கிராம கல்விக் குழுவின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.
இதனை கிராம கல்விக் குழுவின் தலைவராக பதவி வகிக்கும் உள்ளாட்சிமன்றத் தலைவர் மற்றும் அதன் செயலாளராக உள்ள பள்ளித் தலைமையாசிரியர் ஆகிய இருவரும் கையெழுத்திட்டு, வங்கியிலிருந்து ஊதியம் பெறப்பட்டு பகுதி நேர ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், பகுதி நேர ஆசிரியர்களுக்கு குறித்த நேரத்தில் ஊதியம் வழங்குவதில் பல்வேறு காரணங்களால் தடை ஏற்படுகிறது. எனவே குறித்த தேதிகளில் ஊதியம் வழங்க வலியுறுத்தி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கல்வித் துறைக்கு கோரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன.
இதையடுத்து கல்வித் துறை சார்பில் கடந்த வாரம் பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கான மாத ஊதியத்தை, அடுத்த மாத முதல் வாரத்திலேயே வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு அந்தந்த மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலமாக சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
இதை அமல்படுத்தும் வகையில், கடந்த ஜூலை மாதத்திற்கான ஊதியத் தொகையை கடந்த வாரமே வங்கிகளில் செலுத்தப்பட்டது. ஆனால், கிராம கல்விக் குழுவின் தலைவராக உள்ள உள்ளாட்சி மன்ற பிரதிநிதி, ஊராட்சி அல்லது பேரூராட்சி தலைவரிடம் கையெழுத்து பெறுவது சிரமமாக உள்ளது.
ஏனெனில் அவர்களின் சொந்த அலுவல் காரணமாக வெளியூர் செல்வதாலும், பல்வேறு காரணங்களாலும் அவர்களை சந்திக்க முடியாத நிலை உள்ளது. இதனால், கிராம கல்விக் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த அதிகார அமைப்பில் சிறு மாற்றம் செய்து சம்பந்தப்பட்ட பகுதி நேர ஆசியர்களின் வங்கிக் கணக்கில் அரசே நேரடியாக ஊதியத்தை செலுத்த முன்வர வேண்டும் என பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Thanks ~ Dinamani
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக