முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

புதன், 8 மார்ச், 2017

வாரம் 3 அரைநாள் வேலை-மாதம் 4 வாரம் வேலை-வருடம் 11 மாதம் வேலை- ரூ.7000 தொகுப்பூதியத்தில் ஆறு கல்வி ஆண்டுகளாக 16549 பகுதிநேர ஆசிரியர்கள் அரசின் திட்ட வேலையால் சிக்கி தவிப்பு

மாநில ஒருங்கிணைப்பாளர்
செந்தில்குமார்
(9487257203).

கூடுதல் நிதி ஒதுக்கி 16549 பகுதிநேர பயிற்றுநர்களை பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசுக்கு பகுதிநேர பயிற்றுநர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கோரிக்கை. ஐந்து வருடங்கள் ஓடிவிட்டது இந்த 05.03.2017டோடு. 16549 பகுதிநேர பயிற்றுநர்களில் பணியில் சேர்ந்த பிறகு இறந்தவர்கள், 58 வயதானதால் பணி ஓய்வில் சென்றவர்கள், வேலையில் சேராதவர்கள், வேலை வேண்டாம் என்று விலகியவர்கள், அரசுப் பணி கிடைத்து இவ்வேலையை ராஜினாமா செய்தவர்கள், பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் என போக மீதம் இருப்பது எப்படியும் நிரந்தரம் செய்வார்கள் என்ற எதிர்பார்ப்போடு நிராசையுடன் வேலை செய்து வருபவர்கள் பதினைந்தாயிரத்துக்கும் மேலான பகுதிநேர பயிற்றுநர்கள்.

அரசு வேலைக்காக காத்திருந்த ஓவிய, உடற்கல்வி, கணினி அறிவியல், தோட்டக்கலை, இசை, தையல், கட்டிடக்கலை மற்றும் வாழ்வியல்திறன் பாடப்பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் வகையில் மறைந்த மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி. ஜெ.ஜெயலலிதா அவர்களால் “உண்மையான சீரான கல்வி என்பது பாடப் புத்தகத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்காமல் கல்வி இணைச்செயல்பாடுகளுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதன் அடிப்படையில், உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி ஆகியவற்றிற்காக ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 16549 பகுதிநேர ஆசிரியர் பணியிடம் ஏற்படுத்தப்படும். இதனால் இப்பள்ளிகளில் 6,7 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர் பயன் அடைவர். இதற்கு, அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 99 கோடியே 29 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.” என 14வது சட்டமன்றத்தில் முதல் கூட்டத்தொடரில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் அறிவிக்கப்பட்டது. அரசாணை School Education(C2) Department G.O.(MS) No.177 Dated:11.11.2011 வெளியிடப்பட்டு மார்ச் 2012-ம் ஆண்டு பணி நியமனங்கள் செய்யப்பட்டது. ஆண்டு ஒன்றுக்கு 99 கோடியே 29 லட்சம் ரூபாய் என்பது (16549 X 12 X 5000 = 99,29,40,000/-) பகுதிநேர ஆசிரியர்களின் ஒரு ஆண்டிற்கான சம்பளத்தின் கூட்டுத்தொகை ஆகும். ஆனால் 12 மாதங்களில் கோடை கால விடுமுறையான ‘மே‘ மாதத்திற்கு சம்பளத்தை கொடுக்காமல் 11 மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. அரசாணையில் மே மாதத்திற்கு சம்பளம் கிடையாது எந்தவொரு பத்தியிலும் குறிப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, சூழ்ச்சியாக மறுக்கப்பட்டுவரும் 2011-12(ரூ.82745000), 2012-13(ரூ.82745000), 2013-14(ரூ.82745000), 2014-15(ரூ.115843000), 2015-16(ரூ.115843000) ஐந்து கல்வி ஆண்டுகளின் மே மாதங்களின் சம்பள கூட்டுத்தொகை ரூபாய் 51 கோடியே 30 லட்சத்து 19 ஆயிரத்தை அரசு உடனடியாக வழங்கவேண்டும்.

விதி எண்.110-ன் கீழ் 16549 பகுதிநேர ஆசிரியர்கள் பணியிடங்கள் ஏற்படுத்தப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்ததற்கும், அரசாணை வெளியிட்டதற்கும் முரண்பாடு உள்ளது. அரசாணை 177-ல் பகுதிநேரம் என்பதை வாரத்தில் 3 அரைநாட்களாக மாதத்தில் 4 வாரமாக குறிப்பிட்டு, அதில் ஒரு பகுதிநேர ஆசிரியர் ஒன்றுக்கு மேலான பள்ளிகளில் அதிகபட்சமாக 4 பள்ளிகளில் பணிபுரியலாம் அதற்குறிய சம்பளத்தினை அந்தந்த பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று ஆணையிடப்பட்டிருந்தது. ஆனால் பலமுறை கோரிக்கைகளை அரசிடம் கேட்டும் நிதியின்மையை காரணம் காட்டி மறுக்கப்பட்டது. மேலும், இரண்டாவதாக வெளியிடப்பட்ட அரசாணை 186-ல் அதில் ஒரு பகுதிநேர ஆசிரியர் ஒன்றுக்கு மேலான பள்ளிகளில் அதிகபட்சமாக 2 பள்ளிகளில் பணிபுரியலாம் அதற்குறிய சம்பளத்தினை அந்தந்த பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று ஆணையிடப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை அரசாணை 177 மற்றும் 186-ன்படி ஒருவருக்குகூட ஒன்றுக்கும் மேலான பள்ளிகளில் பணிபுரியும் வாய்ப்புகளை அரசு வழங்கவில்லை. ஆக அரசாணையில் ஆணையிடப்பட்டுள்ளதையே இதுவரை அரசு பகுதிநேர ஆசிரியர்களுக்கு மறுத்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

2012-ம் ஆண்டு 16549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டதில் இருந்து சிறப்பாசிரியர் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர் காலிப்பணியிடங்களையும் நிரப்பாமல், 16549 பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்யாமலும் அரசு காலந்தாழ்த்தி வருவதால் மத்திய அரசின் திட்ட வேலையில் ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதிய பகுதிநேர வேலையால் பணியில் தொடர்ந்துவரும் 15000க்கும் மேலான குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கேள்விக்குறியாகி வருகிறது.

ஆறாவது கல்வி ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு, ஏழாவது ஊதியக்கமிஷனால் அரசு ஊழியர்-ஆசிரியர்கள் பலனைடையும்போது, தொகுப்பூதிய வேலை செய்து வரும் அனைத்துவகை ஒப்பந்த பணியாளர்களுக்கும், நிரந்தரப் பணியாளர்களுக்கு இணையான ஊதியத்தின அரசு வழங்க வேண்டும். சம வேலை, சம ஊதியம் என்ற தத்துவத்துக்கு உயிர் கொடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.எஸ்.கெஹர், எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் பஞ்சாப் மாநில ஒப்பந்த தொழிலாளிக்கு ஆதரவாக வழங்கிய தீர்ப்பை அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். பகுதிநேர பயிற்றுநர்களுக்கு உரிய நீதியை அனைவரும் பெற்றுத்தர வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக